Since 1998 — The First Tamil Holy e-Bible

எசேக்கியேல் 19 அதிகாரம்

Tamil Bible · எசேக்கியேல் · Chapter 19 of 48
எசேக்கியேல் 19
1
நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி,
2
சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகளை வளர்த்தாள்.
3
தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
4
புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
5
தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய்ப் போயிற்றென்று கண்டு, அது தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதை பாலசிங்கமாக வைத்தது.
6
அது சிங்கங்களுக்குள்ளே சஞ்சரித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
7
அவர்களுடைய பாழான அரமனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கிற்று; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்துக்கு தேசமும் அதிலுள்ள யாவும் திகைத்தது.
8
அப்பொழுது சுற்றுப்புறத்து ஜாதிகள் அதற்கு விரோதமாக எழும்பிவந்து, தங்கள் வலையை அதின்மேல் வீசினார்கள்; அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது.
9
அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்குட்படுத்தி, அதை பாபிலோனின் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் பர்வதங்களின்மேல் கேட்கப்படாதபடிக்கு அதை அரணான இடங்களில் கொண்டுபோய் அடைத்தார்கள்.
10
நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சச்செடியாயிருந்தாள்.
11
ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்த கொப்புகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன் உயர்த்தியினாலே தன் திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றிற்று.
12
ஆனாலும் அது உக்கிரமாய்ப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் கனி காய்ந்துபோயிற்று; அதின் பலத்த கொப்புகள் முறிந்து, பட்டுப்போயின; அக்கினி அவைகளைப் பட்சித்தது.
13
இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருக்கிறது.
14
அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து அக்கினி புறப்பட்டு, அதின் கனியைப் பட்சித்தது; ஆளுகிற செங்கோலுக்கேற்ற பலத்த கொப்பு இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாயிருக்கும் என்றான்.