யோபு

22 அதிகாரம்


    1. அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:

    2. ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?

    3. நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?

    4. அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?

    5. உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?

    6. முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.

    7. விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர்.

    8. பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.

    9. விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.

    10. ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.

    11. நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.

    12. தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.

    13. நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?

    14. அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.

    15. அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?

    16. காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.

    17. தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.

    18. ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.

    19. எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.

    20. குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.

    21. நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.

    22. அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    23. நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.

    24. அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.

    25. அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்க வெள்ளியுமாயிருப்பார்.

    26. அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.

    27. நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.

    28. நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.

    29. மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள்.

    30. குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்.


முந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்

தமிழில் தேடுதல் | Home